தமிழ்நாடு

திருவள்ளூர்: கிரிக்கெட் விளையாடியபோது விபரீதம்... பந்து பட்டு சட்டக் கல்லூரி மாணவர் பலி

திருவள்ளூர்: கிரிக்கெட் விளையாடியபோது விபரீதம்... பந்து பட்டு சட்டக் கல்லூரி மாணவர் பலி

Sinekadhara

திருவள்ளூரில் கிரிக்கெட் விளையாடியபோது பந்து மார்பில் பட்டு சட்ட கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார்.

திருவள்ளூர் அருகே புன்னப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன்(24). ஆந்திராவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் புன்னப்பாக்கம் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது கிரிக்கெட் பந்தை கேட்ச் பிடிக்க முயன்றுள்ளார். அப்போது பந்து நெஞ்சில் பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக லோகநாதனை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். லோகநாதனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிர் இழந்துவிட்டார் என தெரிவித்திருக்கின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புல்லரம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, உடற்கூராய்வு செய்யவில்லை எனக்கூறி திருவள்ளூர் அரசு மருத்துவமனையின் எதிரில், லோகநாதனின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், மருத்துவர்கள் இல்லாததாலும், உடற்கூராய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும், உடனடியாக உடற்கூறு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறையினர் கூறியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

கிரிக்கெட் விளையாடச்சென்ற சட்டக் கல்லூரி மாணவர் கிரிக்கெட் பந்து மார்பில் பட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.