செய்தியாளர்: அ.ஆனந்தன்
இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக 1997 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜாய் (30) என்பவர் தனது 8-வது வயதில் இலங்கையில் இருந்து கடல் வழியாக தனுஷ்கோடிக்கு அகதியாக வந்துள்ளார். தொடர்ந்து அப்போது அவர் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்.
பின் ஜாய், மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இருந்து தப்பி தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அங்குள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களை சந்தித்து, “1997 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உள்ள நாட்டு போரின் போது இரவு தூங்கி கொண்டிருந்த என்னை எனது பெற்றோர் படகில் இந்தியாவிற்கு ஏற்றிவிட்டு விட்டனர். காலையில் கண் விழித்து பார்த்த போதுதான் தனுஷ்கோடி கடற்கரையில் தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களுடன் இருந்ததை நான் அறிந்தேன். பின் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டேன். ஆனால் என்னை எனது சொந்த நாடான இலங்கைக்கு திரும்பி அனுப்பி வையுங்கள்” என மனு கொடுத்து வருகிறார்.
இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவர் மீது நாகர்கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதில் அங்குள்ள நீதிமன்றம் உடனடியாக ஜாயை இலங்கையில் இருக்கும் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர் இப்போது வரை அனுப்பி வைக்கப்படவில்லை. இதனால் தன்னை தனது நாட்டிற்கு மீண்டும் அனுப்பி வைக்க வலியுறுத்தி பலமுறை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். ஆனால், இதுவரை ஜாய் இலங்கை திரும்பி செல்ல நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து நேற்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த ஜாய் ஆட்சியர் அலுவலகம் அருகே மண்டிபோட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த கேணிக்கரை போலீசார் அவரை க்யூ பிரிவு அலுவலகத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.