தமிழ்நாடு

வீட்டினுள் புகுந்த நல்ல பாம்பு: பிடிக்க முயன்ற பாம்பு பிடி வீரரை கடித்ததால் பரபரப்பு

webteam

அயப்பாக்கத்தில் வீட்டிற்குள் நுழைந்த நல்ல பாம்பை பிடிக்கச் சென்ற நபரை கடித்ததால் பாம்பை சாக்கு பையில் எடுத்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளுர் மாவட்டம் அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சேகர் என்பவரின் வீட்டில் பாம்பு நுழைந்துள்ளது. இதைக் கண்ட சேகர், உடனடியாக வனத்துறை அதிகாரிக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து அம்பத்தூரில் அனைவராலும் அறியப்படும் சிறந்த பாம்பு பிடி வீரரான (ஸ்நேக் கேட்சர்) கணேசன் என்பவர் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றுள்ளார். அங்கு வீட்டிற்குள் இருந்த இரண்டரை அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப்பையில் போட்டுள்ளார்.

அப்போது கைவிரலில் பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது இதையடுத்து சிகிச்சைக்காக அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு பிடிபட்ட பாம்புடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.