பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் புகார்
பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் புகார்  puthiya thalaimurai
தமிழ்நாடு

சேலம் - தலைமை ஆசிரியர் அடித்ததால் கண்பார்வை இழந்த பள்ளி மாணவி; DSP அலுவலகத்தில் பெற்றோர் புகார்!

webteam

செய்தியாளர் - ரவி

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள எம்ஜிஆர் நகர்ப்பகுதியைச் சேர்ந்தவர் குமார். கூலித் தொழில் செய்து வருகிறார் இவர். இவரது மகள் கங்கையம்மாள் (10). இவர் தலைவாசல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி பள்ளி வகுப்பறையில் இருந்த போது பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமுருகவேள் பாடம் நடத்தியுள்ளார்.

பின் மாணவிகளிடம் பாடம் நடத்தியது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் தலைமையாசிரியர் திருமுருகவேள். அப்போது மாணவி கங்கையம்மாளுக்கு அருகிலிருந்த மாணவியை அடிப்பதற்காகக் குச்சியைத் தூக்கி வீசி உள்ளார் திருமுருகவேள். அந்தக் குச்சி கங்கையம்மாளின் இடது கண் மீது விழுந்துள்ளது. இதில் மாணவி அலறி துடித்துள்ளார்.

இதனையடுத்து அவரை மீட்டு அருகிலிருந்த தலைவாசல் வட்டார அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆத்தூரில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவர்கள் கண் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது மாணவி 95 சதவீதம் கண்பார்வை இழந்துள்ளதாகத் தெரியவந்தது.

இதைக்கேட்டுக் அதிர்ச்சியடைந்த கங்கையம்மாளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் திருமுருகவேள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி ஆத்தூர் வருவாய்க் கோட்டாட்சியர் ரமேஷ் மற்றும் ஆத்தூர் டி.எஸ்.பி நாகராஜன் ஆகியோரிடம் மனு அளித்துள்ளனர்.

இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஆத்தூர் ஆர்.டி.ஓ. ரமேஷ் , அவர் மீது துறைரீதியான விசாரணை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இது தொடர்பாகத் தலைமை ஆசிரியர் திருமுருகவேளிடம் நாம் கேட்ட போது, "தெரியாமல் தவறு நடந்து விட்டது. மாணவியின் மருத்துவச் செலவுகளைக் கவனித்து வருகிறேன். யாரோ ஒருவரின் தூண்டுதல் பேரில் புகார் மனு அளித்துள்ளனர்" என்றார்.