தமிழ்நாடு

ஆலங்குளம் அருகே ரவுடி வெட்டிக்கொலை - போலீஸ் விசாரணை

webteam

ஆலங்குளம் பஸ் நிலையம் அருகே ரவுடியை வெட்டிக் கொன்றுவிட்டு மர்ம நபர்கள் தப்பியோடினர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூரை சேர்ந்தவர் சுப்பையா மகன் குமார் என்ற கெவுளி குமார்(35). இவர் மேல் கடையம், ஆலங்குளம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. மேலும் நெட்டூரில் இரு தரப்பிடையே மோதல் காரணமாக மனைவி கனகாவின் (30) சொந்த ஊரான ஆலங்குளம் அருகே குத்தபாஞ்சான் கிராமத்தில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

அங்கும் பிரச்னை காரணமாக ஊரை விட்டு காலி செய்த குமார் அருகில் உள்ள ஊரான ராம்நகருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடி பெயர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை ராம்நகர் பஸ் நிலையம் அருகே உள்ள தேநீர் கடைக்கு சென்றார். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்து மூன்று பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் குமாரை வெட்டினர். இதில் நிலைகுலைந்து போன குமார் ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பாப்பாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குமாரின் உடலை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து பழி வாங்கும் நோக்கில் நடந்த கொலையா? இல்லை வேறு ஏதேனும் காரணமா என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த குமாருக்கு சுப்ரியா(12) என்ற மகளும் விக்னேஸ்வரன்(10) என்ற மகனும் உள்ளார்கள்.