தமிழ்நாடு

தெருவில் சென்றவர்களை விரட்டி விரட்டி கடித்த வெறிநாய் - பொது மக்கள் அலறியடித்து ஓட்டம்

kaleelrahman

பாலக்கோடு அருகே வெறி நாய்கள் கடித்துக் காயமடைந்த, இரண்டு சிறுமிகள் உட்பட 8 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேவுள்ள பஞ்சப்பள்ளியில் தெருக்களில் அதிகளவு நாய்கள் சுற்றி திரிந்து வருகின்றது. இந்நிலையில் வெறிநாய் ஒன்று சாலையில் சென்றவர்களை வரிசையாக கடித்துள்ளது. இதில் பஞ்சப்பள்ளி பகுதியைச் சேர்ந்த மாதவராஜ் என்பவரின் மகள் நிஷா (15), அருண் என்பவரின் மகள் தாரிகா (8), கோமதி (30), நரசிம்மன் (40), சந்திரசேகரன் (49) உட்பட எட்டு பேரை வெறி நாய் கடித்துக் குதறியதில் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பஞ்சப்பள்ளி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்துள்ளனர். வெறி நாய்களை கட்டுப்படுத்த பஞ்சப்பள்ளி ஊராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.