திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் வசிப்பவர் ஆறுமுகம். போக்குவரத்து துறை ஊழியரான இவரது மகள் சசிகலாவுக்கும்(24), பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் வ.உ.சி நகரை சேர்ந்த கணேசன்(32) என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. கணேசன் எண்ணூர் துறைமுகத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்களான நிலையில் சசிகலா 2 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். நேற்று இரவு வேலைக்கு சென்ற கணேசன் இன்று வீடு திரும்பிய போது வீட்டின் படுக்கை அறையில் சசிகலா தூக்கில் தொங்கி இறந்திருந்ததாக அவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து தகவல் அறிந்து வந்து பொன்னேரி கோட்டாட்சியர் நந்தகுமார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து சசிகலாவின் தாய், தந்தை மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். உடற்கூறு ஆய்வுக்கு பிறகே சசிகலாவின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்னவென்று உறுதியாக தெரியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.