தமிழ்நாடு

பெப்பர் ‘ஸ்பிரே’ திருடனை மடக்கிப்பிடித்த ‘விஜயகாந்த்’

பெப்பர் ‘ஸ்பிரே’ திருடனை மடக்கிப்பிடித்த ‘விஜயகாந்த்’

webteam

பெப்பர் ‘ஸ்பிரே’ அடித்து தப்ப முயன்ற திருடனை மடக்கி பிடித்த காவலர் விஜயகாந்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

சென்னை மடிப்பாக்கம் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் விஜயகாந்த். இவர் தற்போது மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் மற்றும் பள்ளிக்கரணை பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்களை தடுக்கும் சிறப்புபிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை சாதாரண உடையில் வேளச்சேரி டான்சி நகர் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது போலீசாரால் பலநாள் தேடப்பட்டு வரும் சைதாப்பேட்டையைச் சேர்ந்த திருடன் சுந்தரம் சுற்றி திரிந்தது தெரியவந்தது. 

மேலும் பல கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால் அவரைப் பிடிக்க விஜயகாந்த் முயற்சி செய்தார்.அப்போது திருடன் சுந்தரம் தன் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த பெப்பர் ‘ஸ்பிரே’ வை விஜயகாந்த் முகத்தில் அடித்தார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட விஜயகாந்த் மடிப்பாக்கம் போலீசாருக்கு செல்போனில் தகவல் அளித்தார். தகவலறிந்து வந்த, மடிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் திருடனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். 

பின்னர் கண், மூக்கு எரிச்சலடைந்த விஜயகாந்த்தை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் சிகிச்சை பெற்று வருகிறார். பெப்பர் ‘ஸ்பிரே’ அடித்து தப்ப முயன்ற கொள்ளையனை மடக்கி பிடித்த காவலர் விஜயகாந்தை உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.