தமிழ்நாடு

சபாநாயகர் நோட்டீஸுக்கு எதிராக அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள் வழக்கு

சபாநாயகர் நோட்டீஸுக்கு எதிராக அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள் வழக்கு

webteam

சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்

அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரின் மீது சபாநாயகரிடம் கொறடா ராஜேந்திரன்  புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் எம்எல்ஏக்கள் 3 பேரும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார். 

இதற்கிடையே, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது. பேரவை செயலாளர் சீனிவாசனை நேரில் சந்தித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு அளித்தார். இந்நிலையில் இன்று 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையிட்டது. 

இந்நிலையில் சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஊடகங்கள் மூலம் அறிந்ததாகவும், எனவே சபாநாயகர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டுமெனவும் வழக்கில் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக முறையிட்டது. திமுகவின் முறையீட்டை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் வழக்கை வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.