தமிழ்நாடு

நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: ஆன்லைன் வழியாக வகுப்புகள் தொடர கோரி மனு

JustinDurai
தமிழகத்தில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கவுள்ள நிலையில் ஆன்லைன் வழியாகவும் மாணவர்கள் வகுப்புகளை கவனிக்க அனுமதிக்கும் வகையில் வழிகாட்டல்களை வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நெல்லையை சேர்ந்த அப்துல் வஹாப் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், கொரோனா தடுப்பூசியை 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு செலுத்துவது தொடர்பாக இதுவரை தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். தடுப்பூசிகள் செலுத்தப்படாமல் மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வது கொரோனா நோய்தொற்று பரவலை அதிகரிக்க செய்ய வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றால் ஒரே வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு இடையேயான கற்றலில் வேறுபாடுகள் எழ வாய்ப்புள்ளதாகவும், ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமையாகவும் அமையும் என வாதிடப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களும் நேரடியாக பள்ளிக்கு வரவேண்டும் என வற்புறுத்தாமல் ஆன்லைன் வழியாக வகுப்புகளை கவனிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பையும் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாகவும் மாணவர்கள் வகுப்புகளை கவனிக்க அனுமதிக்கும் வகையில் வழிகாட்டல்களை வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுதாரர் கோரியிருக்கிறார் இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.