தமிழ்நாடு

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது

webteam

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்துவிட்டு மாறுவேடத்தில் தலைமறைவாக இருந்தவரை புதுக்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டையை சேர்ந்தவர் தனபால். ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவர் தனது மகளின் விருப்பப்படி மருமகன் விஜயகுமாருக்கு ஆசிரியர் வேலை வாங்க முயற்சி செய்துள்ளார். அப்போது புதுக்கோட்டை மாவட்டம்  கட்டுமாவடியை சேர்ந்த சரவணன் என்பவரை அணுகினால் அரசு வேலை வாங்கிவிடலாம் என்று கேள்விப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சரவணனை நாடி சென்றுள்ளார். தன்னைத்தேடி பணம் வருவதை பார்த்த சரவணன், அரசு ஆசிரியர் வேலை வாங்கி்த்தருவதாகவும் அதற்கு 10 லட்சம் ரூபாய் தனக்கு தரவேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் முன்பணமாக ரூ.5 லட்சம் தர வேண்டுன்றும், வேலை வாங்கி கொடுத்தப்பிறகு மீதி 5 லட்சம் தந்தால் போதும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பிய தனபால் தனக்கு பணிநிறைவின் போது கிடைத்த பணத்தையும் சேர்த்து ரூ.5 லட்ச ரூபாயை சரவணனிடம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை வாங்கிய சரவணன் தலைமறைவானார். இதனால் சரவணனை தேடி அலைந்த தனபால் சரவணனை பற்றி தகவல் சேகரிக்க தொடங்கியுள்ளார். 

அப்போது வேறு ஒரு வழக்கிற்காக சரவணன் இன்று புதுக்கோட்டை நீதிமன்றத்திற்கு வருவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு காத்திருந்த தனபால் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறுவேடத்தில் இருந்த சரவணனை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சரவணன் சிறையிலடைக்கப்பட்டார்.