விழுப்புரத்தில் கடன் பிரச்னையால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் தனது மனைவி கண்மணி மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வந்தார். அத்துடன் துணிக்கடை ஒன்றும் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் தொழில் செய்வது தொடர்பாக ஏற்பட்ட கடன் பிரச்னையால் வீட்டினை விற்று கடனை அடைத்துவிட முயற்சி செய்துவந்துள்ளார். ஆனால் இவருடைய வீடு அவரின் மனைவி கண்மணி பெயரில் இருப்பதினால் கண்மணி, அவரது தந்தை மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் கணவன் மனைவிக்கும் இடையே கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக பிரச்னை நிலவி வந்துள்ளது. இதனிடையே நேற்று மீண்டும் கணவன் மனைவி இடையே பிரச்சனை எழுந்ததால், மனைவி கண்மணி அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியிலுள்ள தனது வீட்டில் பிரபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த உறவினர்கள் ரோசனைப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் உயிரிழந்த பிரபுவின் உடலை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை என்பது எந்தப் பிரச்னைக்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060