தமிழ்நாடு

ஓடும் பேருந்தில் இருக்கை உடைந்து சாலையில் விழுந்த பயணி – குமரியில் அரசு பேருந்தின் அவலம்!

webteam

கன்னியாகுமரியில் ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தில் சீட் கழன்று விழுந்து பயணி பேருந்தில் இருந்து வெளியே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து தமிழக கேரள எல்லை பகுதியான பளுகல் பகுதிக்குச் செல்லும் அரசு பேருந்து இன்று காலை இடைக்கோடு பகுதியில் வைத்து பேருந்தின் பின்புற வாசல் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் வலதுபக்க சீட் விழுந்து அந்த சீட்டில் இருந்த மேல்புறம் அருகே வட்டவிளை பகுதியில் தங்கி நியாயவிலை கடையில் வேலை பார்க்கும் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் கீழே விழுந்தள்ளார்.

இதை பார்த்து சக பயணிகள் கூச்சல் போட்டதை அடுத்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி கீழே விழுந்து படுகாயமடைந்தவரை மீட்டு அதே பேருந்தில் கன்னுமாமூடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாவட்டத்தில் இயங்கக்கூடிய உள்ளூர் பேருந்துகளும் தரமற்ற பேருந்துகளாக இயக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பி வரும் நிலையில், இந்த விபத்து நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.