தமிழ்நாடு

படிக்கட்டில் பயணம் செய்ததாக இளைஞரை செருப்பு காலால் எட்டி உதைத்த நடத்துநர்!

சங்கீதா

திருவள்ளூரில் மாநகரப் பேருந்தில் பயணி ஒருவருக்கும், நடத்துநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கி கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 6-ம் தேதி செங்குன்றம் பகுதியில் இருந்து பொன்னேரிக்கு சென்ற மாநகரப் பேருந்தில் பொன்னேரி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் சென்றுள்ளார். அப்போது படியில் பயணித்த அவரை, பேருந்தின் நடத்துநர் தேவன் என்பவர் உள்ளே வரும் படி கூறியுள்ளார். அப்போதும், இளைஞர் உள்ளே வராததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் நடத்துநரை அந்த இளைஞர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடத்துநர் அந்த இளைஞரை தகாத வார்த்தைகளில் திட்டிக் கொண்டே தாக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக கவரப்பேட்டை காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர். பின்னர் இருவரும் சமரசமாகி சென்றதாகவும், இந்நிலையில் தான் இந்த வீடியோ வைரலாகி வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.