கஜாவால் உடைமைகளை இழந்த கூலிவேலை பார்க்கும் தம்பதியர் தங்களின் மகனை 10 ஆயிரம் ரூபாய்க்கு கொத்தடிமையாக அனுப்பிய அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்துள்ளது.
பட்டுக்கோட்டை கரிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் குடும்பத்துடன் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் காஜா புயலால் இவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வீடு மற்றும் உடமைகளை இழந்த இவர் தனது 12 வயது மகன் பெரமையாவை ஆடு மேய்க்கும் பணிக்கு கொத்தடிமையாக அனுப்பி உள்ளார். மாரிமுத்து நாகை மாவட்டம் பனங்குடியைச் சேர்ந்த சந்துருவிடம் 10 ஆயிரம் ரூபாய்க்கு கொத்தடிமையாக அவரது மகனை அனுப்பியிருக்கிறார் என்று குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு புகார் வந்திருந்தது.
இந்நிலையில் புகார் அடிப்படையில் கடந்த 22ஆம் தேதி சைல்டு லைன் உறுப்பினர்கள் சிறுவனை மீட்டு நாகை சார் ஆட்சியரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் விசாரணையில் கொத்தடிமையாக இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அச்சிறுவனை விடுவிக்க ஆணையிட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சுழலில் அச்சிறுவனின் பெற்றோரிடம் விளக்கம் கேட்டதற்கு, கஜாவால் வீட்டை இழந்ததால் குடிசை அமைக்க வழியில்லாத காரணத்தால் தனது மகனை கொத்தடிமை பணிக்காக அனுப்பியதாக தெரிவித்திருக்கின்றனர். மேலும், ஏற்கெனவே தனது முதல் மகன் சந்துரு கொத்தடிமையாகப் பணிபுரிந்ததாகவும் தற்போது அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதால் தனது இரண்டாவது மகனை அனுப்பியிருப்பதாக என தெரிய வந்துள்ளது.