தமிழ்நாடு

சிங்கப்பூரில் இருந்து வந்தவருக்கு குரங்கம்மையா? புதுக்கோட்டையில் பரபரப்பு

webteam

சிங்கப்பூரில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்த நபர் குரங்கம்மை நோய் அறிகுறியுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரிலிருந்து நேற்று திருச்சி விமான நிலையம் வந்த புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியைச் சேர்ந்த 35 வயது இளைஞருக்கு குரங்கம்மை நோய் அறிகுறி தென்பட்டதால் திருச்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால், அதன் பின்னர் அவர் திருச்சி மருத்துவமனையில் இருந்து அவர் வெளியேறி விட்டதால் இதுகுறித்து திருச்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் புதுக்கோட்டை சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் அந்த இளைஞரின் முகவரியை வைத்து அவரது வீட்டிற்குச் சென்ற புதுக்கோட்டை சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை அழைத்து வந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு தனி வார்டில் தங்க வைக்கப்பட்டுள்ள அவரின் உடலில் இருந்து சோதனை மாதிரி எடுத்து புனே ஆய்வகத்திற்கு அனுப்ப உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆய்வுக்குப் பின்னரே அவருக்கு குரங்கம்மை நோய் இருக்கிறதா என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.