பொள்ளாச்சி அருகே தகாத உறவு காரணமாக பைனான்சியர் மணி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையம் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன்(38). இவர் பைனான்சியராக உள்ளார். இவருக்கு மணிமேகலையுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. குணசேகர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகாலிங்கபுரம் பி காலனியைச் சேர்ந்த மணி என்ற குண்டுமணி(37) என்பவரிடம் வட்டிக்கு பணம் கேட்டு வந்துள்ளார்.
பின் இருவருக்கும் பணப் புழக்கம் அதிகரித்த காரணத்தால் இவரது வீட்டுக்கு குண்டு மணி அடிக்கடி வந்து போனதாக கூறப்படுகிறது. அப்போது குணசேகரன் மனைவி மணிமேகலைக்கும் குண்டு மணிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின் நாளடைவில் இருவருக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இதையறிந்த குணசேகரன், தனது மனைவி மணிமேகலையே கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், குண்டுமணியை குணசேகரன் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு குணசேகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணிமேகலை, குண்டுமணியுடன் பல்லடம் ரோடு புளியம்பட்டி கலைஞர் நகரில் தனி வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இந்தச் சூழலில் நேற்று இரவு புளியம்பட்டிக்கு சென்ற குணசேகரன் வீட்டிலிருந்த குண்டுமணியை வெளியே அழைத்து வந்து தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த குணசேகரன், தன்னிடம் இருந்த கத்தியால் குண்டுமணியின் கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் குண்டுமணி பலத்த காயம் அடைந்துள்ளார்.
இதனையடுத்து தகவலறிந்த வந்த மகாலிங்கபுரம் போலீசார், சம்பவ இடத்தில் படுகாயமடைந்து கிடந்த குண்டுமணியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் கொண்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்தக் கொலை சம்பவம் குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய குணசேகரனை தேடி வருகின்றனர்.