விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் கிரஷர் ஆலையில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சேனலூர் பகுதியில் விநாயகா ப்ளூ மெட்டல்ஸ் என்ற கிரஷர் ஆலை இயங்கி வருகிறது. இதில் மரக்காணம் அடுத்த வடநெற்குணம் பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவரின் மகன் சங்கர் (20) பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியில் இருக்கும்போது உயர் மின் அழுத்த கம்பி உரசியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் சங்கரின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சங்கர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி விநாயகா ப்ளூ மெட்டல்ஸ் உரிமையாளரை அழைத்துள்ளனர். ஆனால் அவர் வராததால், ஆத்திரமடைந்த மக்கள் கிரஷரை முற்றுகையிட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் காவல் துணை கண்காணிப்பாளர், விசாரணை செய்து பிரேதத்தை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பத்துள்ளார்.