தமிழ்நாடு

டூ வீலரை மோதுவதுபோல் வந்த மாநகரப் பேருந்து - ஓட்டுநரை ஹெல்மெட்டால் தாக்கிய நபர் கைது

டூ வீலரை மோதுவதுபோல் வந்த மாநகரப் பேருந்து - ஓட்டுநரை ஹெல்மெட்டால் தாக்கிய நபர் கைது

சங்கீதா

சென்னையில் இருசக்கர வாகனத்தில் மோதுவது போல் வந்த மாநகரப் பேருந்து ஓட்டுநரை, ஹெல்மெட்டால் தாக்கிவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், ட்ரங்க் ரோட்டைச் சேர்ந்தவர் ராஜ்குமார். சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். ராஜ்குமார், நேற்று தடம் எண்.101 பேருந்தில் ஓட்டுநர் பணியிலிருந்தார். மாநகரப் பேருந்து திருவொற்றியூரிலிருந்து பூந்தமல்லி நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது கடற்கரை ரயில் நிலையத்தில் பயணிகள் இறங்குவதற்காக பேருந்தை ராஜ்குமார் நிறுத்தியுள்ளார். 

பின்னர் மீண்டும் பேருந்தை எடுத்தபோது, அந்த வழியாக மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மீது, பேருந்து மோதுவது போல் சென்றுள்ளது. இதையடுத்து, உடனே இருசக்கர வாகனத்தில் வந்தவர், பேருந்து ஓட்டுநர் ராஜ்குமாரை அவதூறாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பேருந்தை பின்தொடர்ந்து சென்ற அந்த நபர், ராஜா அண்ணாமலை மன்றம் சிக்னல் அருகே பேருந்து வந்தபோது அதனை வழிமறித்துள்ளார்.

பின்னர், பேருந்து ஓட்டுநர் ராஜ்குமாரை ஹெல்மட் மற்றும் கையால் தாக்கிவிட்டு அந்த நபர் தப்பியோடி விட்டார். இது குறித்து பேருந்து ஓட்டுநர் ராஜ்குமார், எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. எஸ்பிளனேடு போலீசார் விசாரணை நடத்தி, தப்பி ஓடிய சோழிங்கல்லூரைச் சேர்ந்த உமர்பாரூக் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.