தமிழ்நாடு

காதலித்துவிட்டு வேறொரு பெண்ணை கல்யாணம் செய்ய முயன்ற காதலன் - தர்ணாவில் ஈடுபட்ட பெண்

webteam

தன்னை ஏமாற்றி சென்ற காதலனுடன் மீண்டும் சேர்த்து வைக்க வலியுறுத்தி கயத்தார் தாலூகா அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமண பெருமாள் என்பவரது மகள் எபிலாதேவி. இவரும் அதே ஊரைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் பாலமுருகன் ஆகிய இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே இருவரும் காதலித்து வந்ததாக சொல்லப்படும் நிலையில், எபிலாதேவியை திருமணம் செய்து கொள்வதாக பாலமுருகன் உறுதியளித்ததாக எபிலாதேவி தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் பாலமுருகன் தற்பொழுது எபிலாதேவியை திருமணம் செய்ய மறுத்த பாலமுருகன் வரும் 7 ஆம் தேதி வேறொரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தன்னை 6 ஆண்டுகளாக காதலித்து விட்டு திருமணம் செய்யமால் நகை, பணத்திற்கு ஆசைப்பட்டு தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும், பாலமுருகனுடன் தன்னை சேர்த்து வைக்கும்படியும் எபிலாதேவி, கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பாலமுருகன் உறவினர் ஒருவர் காவல் துறையில் பணியாற்றுவதால் தன்னுடைய புகாருக்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தன்னுடைய காதலன் பாலமுருகனுடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி எபிலாதேவி கயத்தார் தாலூகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எபிலாதேவியுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து எபிலாதேவி தனது கோரிக்கை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஐயப்பனிடம் வழங்கினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.