தமிழ்நாடு

தங்கத்தில் காளையுடன் பொங்கல் பானை : அசத்தும் தொழிலாளி !

webteam

ஆம்பூர் அருகே நகைத்தொழிலாளி ஒருவர் தங்கத்தில் பொங்கல் அடுப்புடன் கூடிய பானை மற்றும் காளைமாடு செய்து அசத்தியுள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்தசான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தேவன். இவர் ஆம்பூர் ஷராப் பாஜாரில் கடந்த 35 ஆண்டுகளாக நகைத்தொழில் செய்து வருகிறார். பரம்பரை நகைத் தொழிலாளியான இவர், கின்னஸ் சாதனைப் புரிவதற்காக மில்லி கிராம் தங்கத்தில் நுண்ணிய அளவில் பல்வேறு மாதிரி பொருட்களை திறம்பட உருவாக்கி வருகிறார். 

இந்நிலையில் தைத் திங்கள் முதல் நாளான பொங்கல் திருநாள் பண்டிகையையொட்டி, 1 கிராம் 900 மில்லிதங்கத்தில் மிக நுண்ணிய அளவில் மூன்று கரும்பு, பானை, அடுப்பு, விறகு, காளை மாடு, கரண்டி ஆகியவற்றை தங்கத்தில் தத்ரூபமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக இவர் ஏற்கனவே மிகச்சிறிய அளவில் இந்திய வரைபடத்தை உருவாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘24 மணி நேர இடைவிடாத தொடர் முயற்சியால் இவற்றை உருவாக்கியதாக’  நகைத் தொழிலாளி தேவன் கூறுகின்றார். இதற்கு முன்னர் ஆம்பூரில் புகழ்பெற்ற காலணிகள், தங்கத்தில் தூய்மை இந்தியா மாதிரி வரைபடம், கிரிக்கெட் உலகக் கோப்பை மாதிரி, திருக்குறள் சுவடி, மகாத்மா காந்தி, அப்துல்கலாம், மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் உருவப்படங்கள், தமிழக அரசின் பசுமை வீடு போன்றவை  உருவாக்கியுள்ளார்.

கடந்தமாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 3 கிராம் 700 மில்லி தங்கத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பையும் தத்ரூபமாக காட்டும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் உட்படப் பலவற்றை உருவாக்கி இருந்தார். மேலும் கின்னஸ் சாதனையில் இடம் பெறவேண்டும் லட்சியத்தில் தொடர்ந்து மிககுறைந்த அளவிலான தங்கத்தில் பல பொருட்களை செய்வதாகவும் அவர் கூறுகிறார்.