விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் குண்டாறு பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தில் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியை பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
விருதுநகர் பாலாஜி நகரைச் சேர்ந்த தாமோதரன் என்பவரின் மனைவி விஜயமாலினி( 48). இவர், அருப்புக்கோட்டை அருகே சொக்கம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று விஜயமாலினி, தனது இருசக்கர வாகனத்தில் விருதுநகரிலிருந்து சொக்கம்பட்டி நோக்கி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் குண்டாறு பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட விஜயமாலினி பாலத்தில் இருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மல்லாங்கிணறு போலீசார,; விஜயமாலினியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நிலைதடுமாறி விஜயமாலினி தானாக தடுப்புச்சுவரில் மோதினாரா இல்லை வேறு ஏதேனும் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.