பள்ளிக்கு நிலத்தை தானமாக வழங்கியவர் PT WEB
தமிழ்நாடு

தஞ்சை | ₹2 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்ளிக்கு வழங்கிய முன்னாள் மாணவர்.. நெகிழ்ச்சிச் சம்பவம்!

பள்ளியில் இட நெருக்கடி காரணமாக மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாத நிலை இருந்து வந்த நிலையில் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் ₹2 கோடி மதிப்புள்ள தனது நிலத்தை அப்பள்ளிக்கு தானமாக வழங்கிய செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

PT WEB

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை கீழையூரில், தனது பள்ளிப் பருவத்தை தொடங்கியவர் கோவிந்தராஜ். எழுபது ஆண்டுகளுக்கு முன்பு, அதே ஊரில் உள்ள தொடக்கப் பள்ளியில் தனது கல்வியை முடித்து, பின்னர் உயர் கல்விக்காகவும், தொழில் நிமித்தமாகவும் வெளிநாடுகளுக்குச் சென்று, தற்போது சிங்கப்பூரில் வெற்றிகரமான தொழிலதிபராகத் திகழ்கிறார்.

பள்ளிக்கு நிலத்தை தானமாக வழங்கியவர்

தான் படித்த பள்ளியை ஒருபோதும் மறக்காத கோவிந்தராஜ், பள்ளியின் தற்போதைய நிலையை அறிந்து உதவி செய்ய முன்வந்தார். 2020 ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டாலும், போதிய இடவசதி இல்லாத காரணத்தால், 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் அப்பள்ளியில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாத சூழல் நிலவியது.

இந்த இக்கட்டான நிலையைப் போக்க, கோவிந்தராஜ் ஒரு மகத்தான முடிவை எடுத்தார். பள்ளிக்கு அருகாமையில், ஊரின் மையப் பகுதியில் உள்ள தனது 30,000 சதுர அடி நிலத்தை, பள்ளிக்காக தானமாக வழங்கினார். இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ₹2 கோடி ஆகும். கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி, முறைப்படி பள்ளிக் கல்வித் துறை நிர்வாகத்தின் பெயருக்கு இந்த இடம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கீழையூர் பள்ளி

கோவிந்தராஜின் இந்த செயல், ஒரு தனிப்பட்ட கொடையாக மட்டுமின்றி, கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு சமூகப் பொறுப்பாகவும் பார்க்கப்படுகிறது. இது குறித்து அவர் கூறுகையில், "ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சிக்கும் அடிப்படையான காரணம் கல்விதான். அந்த கல்வி அனைவருக்கும் தரமாக கிடைக்க வேண்டும்; அதற்குப் பொருளாதாரத் தடையோ அல்லது இடவசதித் தடையோ இருக்கக் கூடாது என்பதற்காக, நான் சேர்த்து வைத்த இந்த நிலத்தை பள்ளிக்கு வழங்கியுள்ளேன்" என்று குறிப்பிட்டார். மேலும், அனைவரும் தங்கள் ஊருக்கும் பள்ளிகளுக்கும் தேவையான உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கோவிந்தராஜின் இந்த தாராளமான செயல், அப்பகுதி மக்களால் மட்டுமின்றி, அரசு பள்ளி காப்பாளர்கள், கல்வி வளர்ச்சி குழுவினர் மற்றும் அறக்கட்டளைகள் என பலராலும் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது.