தமிழ்நாடு

கொரோனா கால மகத்துவர்: தினமும் 50 பேருக்கு மதிய உணவளிக்கும் ஊர்க்காவலர் சியாமளாதேவி

webteam

பெருந்தொற்று காலத்தில் சாலையோர ஆதரவற்ற மக்களின் பசியாற்ற மகளின் திருமண சேமிப்பை செலவழித்து வரும் நெல்லையை சேர்ந்த ஊர்க்காவல் படை பெண் காவலரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மாதம் 2,500 ரூபாய் வருமானத்தில் நெல்லை மாநகர ஊர்க்காவல் படையில் காவலராக பணியாற்றி வருபவர் சியாமளாதேவி. இவர், தினந்தோறும் உணவு சமைத்து பொட்டலங்களாக கட்டி அதனை சாலைகளில் உள்ள ஆதரவற்றோருக்கு வழங்கி வருகிறார். ஊரடங்கு தொடங்கிய நாளில், பசியில் சுருண்டு விழுந்த முதியவரின் பரிதாப நிலையைக் கண்டு, மனம் கனத்து இந்த உணவு சேவையை இவர் தொடங்கியிருக்கிறார்.

வீட்டில் சமைப்பது தொடங்கி அனைத்திலும் இவரது குடும்பமும் சியாமளாதேவிக்கு துணையாக நிற்கிறது. திருமண வயதை நெருங்கி உள்ள மூத்த மகளுக்காக சேர்த்த பணத்தையும், உண்டியல் பணத்தையும் எடுத்து இந்த குடும்பம் ஆதரவற்றோருக்கு உணவளித்து வருகிறது. இந்த பெருந்தொற்று காலத்தில் பசியோடு இருப்பவரை கண்டு மனம் இறங்கி உதவி செய்யும் இந்தக் குடும்பத்தின் சேவை பாராட்டத்தக்கது.