தமிழ்நாடு

தருமபுரி சிறுமிக்கு பெருகும் சமூக வலைத்தள ஆதரவு : அதிலொரு உருக்கமான பதிவு

தருமபுரி சிறுமிக்கு பெருகும் சமூக வலைத்தள ஆதரவு : அதிலொரு உருக்கமான பதிவு

webteam

தருமபுரி சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பத்திரிகையாளர் பொன் விமலா தனது முகநூல் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சிட்லிங் மலைக்கிராமத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவி உயிரிழந்ததையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிராமத்திற்குள் யாரும் நுழைய முடியாத படி, சாலைகளில் மரங்கள், மண் குவியல்களை கொட்டி மக்கள் தடை ஏற்படுத்தியுள்ளனர். மாணவிக்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் நேர்ந்தது குறித்து புகார் அளித்து ஒருவாரமாகியும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொன் விமலா என்ற முகநூலில் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், போராடிச் சாக வேண்டுமா என்ற தலைப்பில் “ஒரு பெண் மாதவிடாய் காலத்தில் இருக்கிறாள் என்பதை கூட உணராமல் தங்கள் காமவெறிக்கு அவளை கொன்று போட்டிருக்கிறார்கள். தர்மபுரி சிட்லங்கி என்னும் ஊரைச் சேர்ந்த 17 வயது பெண்.(இப்போதைக்கு பெயர் எதுவும் தேவையில்லை) வேலைக்குப் போன இடத்தில் அதே ஊரைச் சேர்ந்த இரண்டு பேர் மிகக் கொடூரமாக அவளை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே மாதவிடாயின் வலியும் உதிரப்போக்கும் இருக்கும் நிலையில் ரணத்தின் மீதே இவர்கள் தங்கள் காமத்தை இறக்கி வைத்து அப்பெண்ணை துன்புறுத்தித் தூக்கி எறிந்திருக்கிறார்கள்.

தட்டுத் தடுமாறி வீட்டுக்கு வந்ததும் உண்மை அறிந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் 'கற்பழிப்பு' என்றில்லாமல் வெறும் 'முயற்சி' என்கிற ரீதியில் செக்‌ஷன் மாற்றி பதிவு செய்கிறார்கள். எப்.ஐ.ஆர் பதிவு நேரத்திலேயே மருத்துவமனைக்கு அந்த பெண்ணை அனுப்பி வைத்தார்களா என்றால் அதுவும் இல்லை. கீழே விழுந்து மயங்கிவிட்டாள் என்பது போல் இரண்டு நாட்கள் கழித்துதான் போலீஸூம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறது.  ஏழை அப்பாவி மலைவாழ் மக்கள் தானே... பஞ்சாயத்து செய்து அனுப்பி வைப்போம் என்கிற மனப்போக்கு தான் அந்தப் பெண்ணை இன்று துடிக்கத் துடிக்கச் சாகடித்திருக்கிறது. இப்போது அந்த ஊரில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஓட்டு போட்ட மக்களுக்கு வீதிக்கு வருவதைத் தவிர வேறென்ன தெரிந்துவிடப் போகிறது?" என தெரிவித்துள்ளார்.