தமிழ்நாடு

‘குடி’மகனால் சங்கடத்திற்குள்ளான பயணிகள்!

webteam

குமுளி பேருந்து நிலையத்தில் மதுபோதையில் நிதானமின்றி கிடந்த நபரால் பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டது.

தமிழக கேரள எல்லையை இணைக்கும் தமிழக குமுளி பேருந்து நிலையத்தில் காத்திருப்பு மையம் உள்ளது. இங்கு காலையில் உச்சகட்ட மதுபோதையில் வந்து விழுந்த 50 வயது மதிக்கத்தக்கவர் மாலை வரை கண்விழிக்கவில்லை. இடையிடையில் புரள்வதும் புலம்புவதுமாக இருந்த அந்த நபர், அவ்வப்போது வாந்தியும் எடுத்ததால் துர்நாற்றம் வீசியது. 

இதைக்கண்ட பயணிகள் சகிக்காமலும் காத்திருப்பு மையத்தில் இருந்து வெளியேறினர். பொதுவாக தமிழக குமுளி பேருந்து நிலையத்தில் அந்த ஒரு இளைப்பாறும் மையம் மட்டுமே உள்ளது. மலைப்பகுதி என்பதால் ஒரு பேருந்துக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்நிலையில் அந்த மையம் முழுவதையும் மதுபோதையில் இருந்தவர் அசிங்கம் செய்ததால், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, பயணிகள் தங்கள் சுமைகளுடனும், குழந்தைகளுடனும் சாலையிலேயே நின்று பேருந்தில் ஏற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுபோன்று குடித்துவிட்டு பொது இடங்களில் கிடப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் தான், அவர்கள் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.