தமிழ்நாடு

ஆடவும் வேண்டாம்..பாடவும் வேண்டாம்.. தானாகப் பால் கறக்கும் அதிசய பசு 

ஆடவும் வேண்டாம்..பாடவும் வேண்டாம்.. தானாகப் பால் கறக்கும் அதிசய பசு 

webteam
ஆடுகின்ற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும். பாடுகின்ற மாட்டைப் பாடிக் கறக்க வேண்டும் என்ற பழமொழியைப் பலரும் அறிந்திருக்கலாம். ஆனால் கடலூரில் உள்ள ஒரு பசு மாடு எதுவுமே செய்யாமல் தானாகவே பால் கறக்கும் அதிசயச் செயலை செய்து வருகிறது.
 
கடலூர் மாவட்டம் திருமாணிக்குழி கிராமத்தில் வசிப்பவர் மணிகண்டன். இவர் வீட்டில் சில பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக ஒரு பசு கன்று ஈன்றுள்ளது. அன்று முதல் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் இந்தப் பசுவின் மடியின் அருகில் பாத்திரத்தை வைத்தால்போதும் தானாகவே ஒரு லிட்டர் வரை பால் கறந்துவிடுகிறது. இந்தப் பசுவின் அதிசயச் செயலைக் கண்டு அக்கம் பக்கத்தினர் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
 
 
இது குறித்து பசுவின் உரிமையாளர் பூரணி, “சமீபத்தில் ஒரு பசு வாங்கினோம். இது கன்று ஈன்று 20 நாள்கள் ஆகிறது. அன்று முதல் மடிக்கு அருகில் பாத்திரத்தைக் கொண்டு சென்றாலே ஒரு காம்பிலிருந்து தானாகவே பால் வருகிறது. இதுவரை இதைப்போன்று வேறு எந்த மாட்டிற்கும் நடந்தது கிடையாது.  இது ஒரு வித்தியாசமாக இருக்கிறது. அதிசயமாகவும் இருக்கிறது. பொதுமக்கள் அனைவரும் வந்து இதைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள்” என்கிறார்.
 
இந்தப் பசுவின் ஒரு காம்பில் கன்று பால் குடித்துக் கொண்டிருந்தாலும் அதன் அருகே உள்ள இன்னொரு காம்பில் பாத்திரத்தைக் காட்டினால் உடனே அதில் பால் சுரக்கிறது. இந்த அதிசயத்தை ஆச்சரியம் பொங்கப் பலரும் கண்டு வியந்து வருகின்றனர். இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், ‘பால் சுரக்கும் காம்பு பலகீனமாக இருந்தால் அதன் துளை திறந்தபடியே இருக்கும். ஆகவே இப்படி நடக்கலாம்’ என்கிறார்கள். மருத்துவர்கள் இவ்வாறு கூறினாலும் மடியின் அருகே உள்ள பாத்திரத்தை எடுத்துவிட்டால் பசு கறப்பதைப் பசு நிறுத்திவிடுகிறது. அதுதான் அடக்க முடியாத ஆச்சரியமாக உள்ளது.