தமிழ்நாடு

குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தம்பதி!

webteam

திருவள்ளூரில் 4 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த அய்யம்பேட்டையைச் சேர்ந்த கலையரசன் (37) என்பவருக்கும், திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த வாசினம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நித்தியா (30) என்பவருக்கும் திருமணமாகி ஹேம்நாத் (4) என்ற மகன் இருந்துள்ளார். இந்த நிலையில், கலையரசன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வாசினம்பட்டு கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் குடியேறியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டில் 3 பேர் உயிரிழந்து கிடப்பதாக மப்பேடு காவல் நிலையத்திற்கு வந்த தகவலையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குழந்தை ஹேம்நாத்திற்கு முதலில் கொக்கு மருந்து விஷத்தை கொடுத்து குழந்தையின் உயிர் பிரிந்த பிறகு கலையரசனும், அவரது மனைவி நித்யாவும் கொக்கு மருந்து விஷத்தை அருந்தியதாகவும், பின்னர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மூன்று பேரின் சடலங்களையும் மீட்ட மப்பேடு காவல் துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.