தமிழ்நாடு

தாங்கள் படித்த பள்ளியின் நலனுக்காக 80s மாணவர்கள் செய்த செயற்கரிய செயல்!

webteam

திருவோத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.7 லட்சம் செலவில் 2 கூடுதல் வகுப்பறைகளை முன்னாள் மாணவர்கள் கட்டிக் கொடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவோத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 1984-85 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் 80 பேர் சந்திப்பு கூட்டம் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிக்கு இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டித் தருவதாக உறுதி அளித்தனர்.

அதன்பேரில் ரூ.7 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறை கட்டி முடித்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், முன்னாள் மாணவருமான செந்தில் தலைமை தாங்கினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். முன்னதாக முன்னாள் மாணவர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். இதையடுத்து தலைமையாசிரியர் தரணிகுமார் வகுப்பு அறைகளை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ரவி, சண்முகம் முன்னாள் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். முடிவில் மாணவர் ஞானசேகரன் நன்றி கூறினார்.