தமிழ்நாடு

தொங்கிய வளையத்தில் அமர்ந்து கர்ப்ப பிண்ட ஆசனம் செய்து சாதனை படைத்த கல்லூரி மாணவி

kaleelrahman

விருதுநகரில் 15 அடி உயரத்தில் தொங்கிய வளையத்தில் கர்ப்ப பிண்ட ஆசனம் செய்து கல்லூரி மாணவி சாதனை படைத்தார்.

விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் - ஜானகி தம்பதியரின் மகள் அனுப்பிரியா. இவர், நாமக்கல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், சிறுவயது முதலே யோகா மீது ஆர்வம் கொண்ட இவர், மாநில அளவிலான யோகா போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் அனுப்பிரியா, விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கில் 15அடி உயரத்தில் தொங்கிய வளையத்தில் மீது அமர்ந்து தொடர்ந்து 8 நிமிடம் கர்ப்ப பிண்ட ஆசனம் செய்தார். இதை நோபில் வேர்ல்டு ரெக்கார்ட் நிறுவனம் இந்த சாதனை அங்கீகரித்து நடுவர்கள் திலீபன், பசுபதி ஆகியோர் இதற்கான சான்றிதழை வழங்கினர்.

முன்னதாக கல்லூரி இந்த யோகாசன நிகழ்ச்சியை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தொடங்கி வைத்தார். சாதனை புரிந்த மாணவியை யோகா ஆசிரியர் ஜெயக்குமார் உட்பட பலரும் பாராட்டினர்.