தமிழ்நாடு

சென்னை: அரசுப் பேருந்து மோதியதில் வியாபாரி உயிரிழப்பு

சென்னை: அரசுப் பேருந்து மோதியதில் வியாபாரி உயிரிழப்பு

JustinDurai
சென்னையில் அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற துணி வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியைச் சேர்ந்தவர் முகமது அலி (46). தி.நகர் பகுதியில் துணி வியாபாரம் செய்துவரும் இவர், நேற்று இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோடம்பாக்கம் மேம்பாலம் கீழ் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வடபழனியில் இருந்து பட்டினப்பாக்கம் நோக்கி சென்ற 12 பி மாநகர பேருந்துக்குள் முகமது அலி நிலைதடுமாறி விழுந்தார். இதில் பேருந்து சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே முகமது அலி பரிதாபமாக உயிரிழந்தார்.
நிகழ்விடத்திற்கு வந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் முகமது அலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக மாநகர பேருந்து ஓட்டுநரான விழுப்புரத்தைச் சேர்ந்த குப்புசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.