தமிழ்நாடு

திருவண்ணாமலை: சாலையில் சென்றபோது திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

webteam

வந்தவாசி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மீனவர் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனக்குச் சொந்தமான காரில் அதிகாலை 4 மணி அளவில் காஞ்சிபுரம் அடுத்த பெருநகர் கிராமத்திற்கு சென்று விட்டு வந்தவாசியை அடுத்த தென்னாங்கூர் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென காரில் இருந்து புகை வந்ததை அடுத்து கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து காரில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வந்தவாசி தீயணைப்புத் துறையினர் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.