தமிழ்நாடு

வேதாரண்யம்: ஒட்டிய இரட்டை தலையுடன் கன்றை ஈன்ற பசு.. பால் குடிக்க முடியாமல் அவதி!

webteam

வேதாரண்யம் அருகே மருதூர் கிராமத்தில் பசுமாடு ஒன்று இரட்டைத் தலையுடன் கன்றை ஈன்றுள்ளது. இந்த கன்றை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மருதூர் குட்டியாப்பிள்ளை கட்டளை பகுதியைச் சேர்ந்த உத்திராபதி - மைதிலி என்ற தம்பதி வளர்த்து வந்த சினை பசுமாடு ஒன்று இன்று காலையில் அபூர்வ கிடாரி கன்று ஒன்றை ஈன்று உள்ளது. இரட்டை தலையுடன் கூடிய அந்த கன்று ஒட்டிய இரண்டு தலை, நான்கு கணகள் இரண்டு நாக்கு இரண்டு காதுகளுடன் காணப்படுகிறது ஆனால் நான்கு கண்களில் இரண்டு கண்களினால் மட்டுமே கன்று பார்க்க முடிகிறது தலை அதிக கணத்துடன் உள்ளதால் தலையை தூக்க முடியாமல் கன்று சிரமப்படுகிறது, மற்ற கன்றுகளிலிருந்து வேறுபட்டு காணப்படும் இந்த கிடாரி கன்றை சுற்று வட்டாரக் கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

அறுவை சிகிச்சை செய்து பசு மாட்டிலிருந்து கன்றை எடுக்க வேண்டிய நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் முருகையன் என்பவர், அதற்கு சிகிச்சை அளித்து போராடி அந்த கன்றை பசுமாட்டின் வயிற்றிலிருந்து வெளியில் எடுத்துள்ளார். பால் குடிக்க முடியாமலும் சுவாசிக்க முடியாமலும் அந்த கன்று சிரமப்பட்டு வருகிறது. இதனால் மாற்றுத் திறனாளி குழந்தையை போல அந்த கன்றை குடும்பத்தினர் பாதுகாத்து வருகின்றனர்.