தமிழ்நாடு

அண்ணனுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு

webteam

கோவில்பட்டியில் வீட்டின் முன்பு அண்ணனுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதி நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர்கள் உத்தண்டராமன் - உத்ரா தம்பதியினர். இவர்களது மகன் அகிலன் (3) மற்றும் இவரது சகோதரர் உத்தண்டு ஆகிய இருவரும் தங்களது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, வீட்டின் முன்புறமுள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியில் அகிலன் தவறி விழுந்துள்ளார். இதையடுத்து சிறுவனை மீட்ட தாய் உத்ரா மற்றும் அக்கம் பக்கத்தினர், கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர், சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.