தமிழ்நாடு

சென்னை: புடவையில் ஊஞ்சல்கட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

webteam

வீட்டில் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் மூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணப்பன். இவருக்கு ஜஸ்வந்த் என்ற 5 வயது மகனும், இரண்டரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்த நிலையில், ஜஸ்வந்த் திருமுல்லைவாயலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் பள்ளி விடுமுறை நாளான நேற்று ஜஸ்வந்த் தனது தம்பியுடன் வீட்டின் மாடியில் புடவையில் ஊஞ்சல் கட்டி இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஜஸ்வந்த் கழுத்தில் புடவை சுற்றிய நிலையில் மயங்கி கீழே விழுந்துள்ளான். இதையடுத்து குழந்தையின் அலறல் சுத்தம் கேட்டு பெற்றோர் ஓடிவந்து பார்த்த போது ஜஸ்வந்த் கீழே மயங்கி நிலையில் கிடந்துள்ளான்

உடனடியாக சிறுவனை அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த திருமுல்லைவாயில் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.