பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் 19 வயது பெண் ஒருவர் 17 வயது சிறுவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் 17 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி இளம் பெண் திருமணம் செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த 19 வயது இளம்பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அந்த பெண்ணை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதுவரை சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் நபர்கள், மற்றும் கட்டாய திருமணம் செய்யும் நபர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது 17 வயது சிறுவனை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த புகாரில் பெண் ஒருவர் முதல் முறையாக கைது செய்யப்பட்டிருப்பது, அதிர்ச்சியையும் புதியதொரு வழிமுறையையும் உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.