தும்மக்குண்டு கள்ளர் மேனிலைப் பள்ளியில் 45 பேர் இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். வெளியான தேர்வு முடிவில் தமிழ் பாடத்தில் மட்டும் 9 மாணவர் தோல்வியுற்றனர். இதற்கு காரணம் அந்த பள்ளியில் ஓராண்டாக தமிழாசிரியர் இல்லை என்பதே.
மேனிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பிற்கு தமிழாசிரியர் பணி ஒதுக்கப்பட்டிருந்தாலும், அந்த இடம் காலியாகவே உள்ளது. இதன் விளைவாக மாணவர்களுக்கு சரியாக வகுப்புகள் நடைபெறாத நிலையால் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊர்மக்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
இப்பள்ளி தலைமையாசிரியர் ஜவஹர், கள்ளர் பள்ளி இணை இயக்குநர் அலுவலகத்தில் கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு வகிப்பதால், பல நாட்கள் அந்த அலுவலகம் சென்றுவிடுவதால் கண்காணிப்பு இல்லாததும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் சிறந்த கல்வி வழங்கப்பட்டாலும், இதுபோன்று ஆங்காங்கே நீடிக்கும் பிரச்சினைகளை கண்டறிந்து போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை தொடர்புகொண்டு இதுகுறித்து கேட்டபோது, 'தற்போது தான் இதுதொடர்பாக தகவல் வந்துள்ளது. தமிழ் ஆசிரியர் ஏன் பணியமர்த்தப்படவில்லை என்பது குறித்து விரிவாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என தெரிவித்தார்.