தமிழ்நாடு

கேபிள் இணைப்பு துண்டிக்கப்பட்ட விரக்தியில் மாணவர் தற்கொலை

webteam

சென்னை தாம்பரம் அருகே தொலைக்காட்சி‌ கேபிள் இணைப்பு துண்டிக்கப்பட்ட விரக்தியில் எட்டாம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணையில் உள்ள சீனிவாச நகரைச் சேர்ந்த‌வர் கொளஞ்சிநாதன். இவரது வீட்டில் ஓராண்டுக்குப் பின்னர் கடந்த ஞாயிறன்று மீண்டும் கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்டது. இதன் பிறகு, அவரது மகன்கள் அரவிந்த் கிருஷ்ணன், அமுதீஸ்வரன் ஆகிய இருவரும், சரிவர பாடங்களைப் படிக்காமல் டிவி பார்த்துக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் வியாழனன்று இவர்களின் தாய் சங்கீதா, கேபிள் இணைப்பை துண்டித்துள்ளார். இந்நிலையில் வேலைக்குச் சென்று வீடு திரும்பிய பெற்றோர், படுக்கை அறை ஜன்னல் கம்பியில் துண்டு மூலம் தூக்குப் போட்டு உயிரிழந்த நிலையில் அமுதீஸ்வரன் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கேபிள் இணைப்பு துண்டிக்கப்பட்ட விரக்தியில் மாணவர் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து பீர்க்கன்காரணை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.