தமிழ்நாடு

85 லட்சம் இந்தியன் தாத்தாக்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துவர வேண்டும் - கமல்ஹாசன்

kaleelrahman

தமிழகத்தில் இவ்வளவு பெரிய எழுச்சியை ஏற்படுத்திக் கொடுத்த ஊழல்வாதிகளுக்கு நன்றி என கமலஹாசன் தெரிவித்தார். இதுவரை ஓட்டுப் போடாதவர்களின் விழுக்காடு அதிகம் உள்ளது. இனி கடமை தவறாமல் வாக்களியுங்கள் ஓட்டு அரசியலை இளைஞர்கள் கையில் எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

சேலம் அம்மாபேட்டை பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனான சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் பேசும்போது, “இளைஞர்கள் பெண்கள் நினைத்தால் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தாய்மார்களின் கூட்டம் அலைமோதுவது மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைத்த பெருமை. இவ்வளவு பெரிய எழுச்சியை எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த ஊழல்வாதிகளுக்கு நன்றி” என தெரிவித்தவர்..

மேலும், “நேர்மைக்கு உயர்ந்த இடத்தை மக்கள் கொடுக்க உறுதியேற்க வேண்டும், இதுவரை ஓட்டுப் போடாதவர்களின் விழுக்காடு அதிகம் உள்ளது. இனி கடமை தவறாமல் வாக்களியுங்கள் ஓட்டு அரசியலை இளைஞர்கள் கையில் எடுக்க வேண்டும்” என்றார்.

“தமிழகத்தில் 60 வயதை கடந்தவர்கள் 85 லட்சம் பேர் இருக்கிறார்கள். 85 லட்சம் இந்தியன் தாத்தாக்கள் மிகுந்த கோபத்தோடு இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் தள்ளாதவர்களாக இருந்தால் இளைஞர்கள் கையை பிடித்து ஓட்டுச் சாவடிக்கு அழைத்துச் செல்லுங்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியில் நேர்மை நோக்கத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்” என்று பேசினார் கமல்ஹாசன்.

இதனிடையே, எட்டுவழிச் சாலையால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். எட்டு வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் சார்பில் கமல்ஹாசனிடம் மனு அளிக்கப்பட்டது.