8 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் Pt web
தமிழ்நாடு

திருச்சி | ரூ.8 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்.. வடமாநிலத்தவர் இருவர் கைது.!

திருச்சி திருவெறும்பூர் அருகே 8 லட்சத்து 37 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை காரில் கடத்தி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

PT WEB

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நேற்றிரவு, வெளிமாநில பதிவெண் கொண்ட காருக்கு பெட்ரோல் போடப்பட்டது. அப்போது, பெட்ரோலுக்காக செலுத்திய தொகையில் கள்ள நோட்டு இருப்பதை அறிந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துவாக்குடி காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, துவாக்குடி போலீசார் வெளி மாநில பதிவெண் கொண்ட வாகனங்களை பின் தொடர்ந்து வந்தனர். மேலும், மஞ்சத்திடல் செக் போஸ்ட்டில் வாகனத்தை மறித்து சோதனையிட அங்குள்ள காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கள்ள நோட்டுகளை கடத்தி வந்த வட மாநிலத்தவர்கள்

இந்த நிலையில், மஞ்ச திடல் செக் போஸ்டில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது அதிவேகத்தில் வந்த வட மாநில பதிவென் கொண்ட கிவிட் காரை மறித்தனர். தொடர்ந்து, அந்த வாகனத்தை சோதனையிட்டபோது இரண்டு பைகளில் 200 ரூபாய் கள்ள நோட்டு கட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, 200 ரூபாய் கள்ள நோட்டு 41 கட்டுகள் உட்பட ரூ.8,37,800 மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் காரில் வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் பாபாரோ பாஹிர் (54), நாராயண ராம் (34) ஆகிய இருவரையும் பிடித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் மதுரை புதுக்கோட்டை தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளநோட்டுகளை மாற்றி விட்டு திருச்சி வழியாக செல்லும் போது பிடிபட்டது தெரியவந்துள்ளது. மேலும், இதில் யாரெல்லாம் தொடர்பில் உள்ளார்கள்?. வேறு ஏதும் கள்ள நோட்டுகள் உள்ளதா? என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.