தமிழ்நாடு

ஏலச்சீட்டு நடத்தியவர் எடுத்த விபரீத முடிவு.. பணத்தை பறிகொடுத்து தவிக்கும் 600 பேர்

webteam

திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி 3 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதால் 800 பேர் ஏமாந்து போயுள்ளனர். 

திருச்சி பாலக்கரை எடத்தெருவில் பொன்மகள் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் கண்ணன் என்பவர் சீட்டு நடத்தி வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள 800க்கும் மேற்பட்டோர் அவரிடம் 50 ஆயிரம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை சீட்டுக்கான தொகை செலுத்தியுள்ளனர். 700 பேர் 500 ரூபாய் சீட்டு கட்டியுள்ளனர். இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி அன்று ஒரு கோடி ரூபாய் சீட்டு தொகையை பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டும். இந்நிலையில் கண்ணன் தற்கொலை செய்து கொண்டார்.

அவரிடம் 800க்கும் மேற்பட்டோர் மாதம் மாதம் சீட்டுத் தொகை செலுத்தி சிலருக்கு பணமும் கொடுக்கப்பட்டுள்ளது. கடைசி சீட்டு முடிந்து தற்பொழுது தொகையை பெற முற்பட்டவர்கள் பணம் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சீட்டு பணம் கிடைக்காததால் இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயனை சந்தித்து தங்களது பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க மனு கொடுத்து உள்ளனர்.

சுமார் 3 கோடி ரூபாய் ஏமாற்றப்பட்டுள்ளதாக மனு கொடுக்க வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். கண்ணன் வீட்டில் உள்ளவர்களும் தற்பொழுது எங்கே சென்றுள்ளார்கள் என்று தெரியவில்லை. நாளை இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவினர் இவர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.