தமிழ்நாடு

அரசுப் போக்குவரத்துக் கழக மேற்கூரை இடிந்து 8 பேர் பலி!

webteam

அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நாகை அருகே பொறையாரில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளது. இரவு நேரங்களில் பேரூந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள்  பணிமனைக்கு திரும்பும்போது இங்கு தூங்குவது வழக்கம். நேற்று இரவும் வேலை முடிந்து வழக்கம் போல தூங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலை 3 மணியளவில் பணிமனையின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் தூங்கிக்கொண்டிருந்த 8 பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
இதையடுத்து காவல்துறை, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. படுகாயமடைந்தவர்களும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகிறது. அதில் மேலும் பல பணியாளர்கள் சிக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. மேற்கூரை இடிந்து விழுந்த கட்டடம் மிகவும் பழைமையானது எனக் கூறப்படுகிறது.