தமிழ்நாடு

74-வது சுதந்திர தினம்: ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கு தங்கப் பதக்கம்

74-வது சுதந்திர தினம்: ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கு தங்கப் பதக்கம்

webteam

நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், ஒரே மாவட்டத்தை இருவர் சிறந்த பணிக்கான விருதுக்காக தேர்வாகியுள்ளனர்.

விருதுநகர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மகப்பேறு மருத்துவரான உமா மகேஸ்வரி, கொரோனா முகாமில் 12 நாட்களில் 29 பெண்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளித்துள்ளார். இதில் 26 நபர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் மகப்பேறு சிகிச்சை அளித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்தக் கொரோனா காலத்தில் அதிக நபர்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளித்தமைக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

இது குறித்து அவர் கூறும் போது “ உண்மையில் அது கடினமான ஒரு சூழ்நிலை. 8 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் நான்கு மருத்துவர்கள்  மட்டுமே இருந்தனர். அதிலும் சிலருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டது. அந்த சமயம் எனது குடும்பமும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் நாங்கள் பயப்படவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு உதவுவது எங்கள் கடமை என்பதை கருத்தில் கொண்டு பணியாற்றினோம்” என்றார்.

மூத்த மருத்துவர் ஒருவர் கூறும்போது “ கடந்த ஜீலை, ஆகஸ்ட் மாதங்களில் 87  நபர்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 63 நபர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது” என்றார்.

அதேபோல அருப்புக்கோட்டையிலுள்ள  கிராம நிர்வாக அலுவலர் பிருத்விராஜ் அவர்களுக்கு சிறந்த பணிக்கான விருது வழங்கப்படுகிறது. உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த பிருத்விராஜின் சகோதரரை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால் அவர் உயிரிழந்தார். அதனால் வெகுவாக பாதிக்கப்பட்ட பிருத்வி தனது சொந்த வருமானத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி மக்களுக்கு சேவையாற்றினார். 

தனது சகோதரரின் பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் இவர், அதன் மூலம் பல சமூக சேவைகளையும் செய்து வருகிறார். இவரது சேவைகளை பார்த்த வெளிநாட்டு நபர் ஒருவர் நான்கு படுக்கைகள் கொண்ட ஆம்புலன்ஸை வழங்கியுள்ளார். இதன் மூலம் 14 கொரோனா நோயாளிகளை ஒரே நேரத்தில் உட்காரவைத்து ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியுமாம். இந்தச் சேவையை அவர் இந்தக் கொரோனா காலத்தில் செய்துள்ளார்.