தமிழ்நாடு

’நோன்பு திறக்கவருபவர்கள் அல்லாவின் விருந்தாளிகள்!’ - நெல்லையில் 700 பேர் பங்கேற்ற விருந்து

Sinekadhara

நெல்லை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி வாசலில் 8 வகை பழங்கள், இரண்டு வகை ஜூஸ், மட்டன் மற்றும் இஞ்சி பூண்டு சீரகம் என 15 க்கும் மேற்பட்ட மருந்து உணவுப் பொருட்களைக் கொண்டு தயாரித்த நோன்பு கஞ்சி வழங்கி, 30ஆம் நாள் நோன்பை 700க்கும் மேற்பட்டோர் ஒருசேர திறந்தனர்.

ரம்ஜான் பண்டிகைக்காக 30 நாட்கள் நோன்பு திறப்பது இன்றுடன் முடிவடைகிறது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள மஜ்துர் ரகீம் ஜீம்மா பள்ளிவாசல் வளாகத்தில் ஒரே நேரத்தில் 700 பேர் நோன்பு திறக்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. நோன்பு திறப்பவர்கள், அல்லாஹ்வின் விருந்தாளிகள் என்ற அடிப்படையில் பழங்கள், பழ ஜூஸ், மட்டன் மற்றும் பிரத்யோகமாக தயாரிக்கபட்ட நோன்பு கஞ்சி இவைகளை வழங்கி விருந்தாளிகளை வரவேற்கிறோம் என்கின்றனர் பள்ளிவாசல் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்.

இதில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு வகைகள்,

  • மா, பலா, கொய்யா, தர்பூசணி, திராட்சை, அன்னாசி உட்பட எட்டு வகையான பழங்கள்
  • மட்டன் ஒரு கப், உளுந்த வடை ஒன்று காரவடை ஒன்று
  • மாம்பழம் மற்றும் கிர்னி வகை ஜூஸ்கள்
  • பச்சரிசியுடன் இஞ்சி மிளகு சீரகம் பூண்டு ஏலக்காய் கிராம்பு நெய் கொத்தமல்லி புதினா உட்பட 15 வகையான மருந்தே உணவான பொருட்கள் கொண்டு தயாரித்த நோன்புக் கஞ்சி என இவை அனைத்தும் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரே இடத்தில் அமர்ந்து கடவுளுக்கு நன்றி சொல்லி நோன்பை துறந்தனர். ஏழை எளியவர்கள் மட்டுமின்றி பசியில் வாடும் அனைவரின் வலியை உணர்ந்து எக்காலத்திலும் யாருக்கும் எந்த சூழலிலும் உணவு வழங்க தயங்காமல் உதவும் எண்ணத்தை உருவாக்கும் திருநாள் ரம்ஜான். இதனை வலியுறுத்தும் விதமாக 30 நாள் பசியுடன் நோன்பு இருந்தவர்கள் இன்றோடு நோன்பை முடித்து நாளை குடும்பத்துடன் இணைந்து பண்டிகையை கொண்டாட தயாராகின்றனர்.