தமிழ்நாடு

செஞ்சி-பிறந்த நாளுக்கு மாணவன் கொடுத்த சாக்லெட்டை சாப்பிட்ட சக மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

webteam

செஞ்சி அருகே பிறந்த நாளுக்கு மாணவன் கொடுத்த சாக்லெட் சாப்பிட்ட 7 மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், 30 மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த அனந்தபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவனின் பிறந்த நாளை முன்னிட்டு வகுப்பில் உள்ள சகமானவர்களுக்கு சாக்லெட் வழங்கியுள்ளார். இந்த சாக்லெட்டை சாப்பிட்ட சிறிது நேரத்தில் ஏழு மாணவர்களுக்கு வயிற்று வலி மற்றும் வாந்தி லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்களை அனந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

இதையடுத்து மேலும் சாக்லெட் சாப்பிட்ட மற்ற 23 மாணவ, மாணவிகளும் பயமடைந்தனர். இதனால் ஆரம்ப சுகாதார நிலைய மருத்து அலுவலர் டாக்டர் பாலாஜி குழுவினர் பள்ளிக்கு வந்து பள்ளியிலேயே சாக்லேட் சாப்பிட்ட 23 மாணவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால், அவர்களுக்கு எந்தவித கோளாறும் ஏற்படவில்லை. மேலும் சிகிச்சை பெற்ற ஏழு பேரும் சில மணி நேரத்துக்கு பின் சரியாகி விட்டனர். இச்சம்பவத்தால் அனந்தபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து தகவல் அறிந்த அனந்தபுரம் போலீசார் நேரில் சென்று சாக்லெட்டுகளை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.