தமிழ்நாடு

போலீசாரை கண்டதும் ’ஐம்பொன் சிலைகளை’ விட்டுவிட்டு தெறிச்சு ஓடிய கொள்ளையர்கள்!

Sinekadhara

ஆவடி அருகே பட்டாபிராமில் இரு கோயில்களில் 7 ஐம்பொன் சிலைகள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச்செல்ல ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது போலீசாரை கண்டதும் சிலைகளை போட்டுவிட்டு தப்பி ஓடிய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆவடி அடுத்த பட்டாபிராம் முல்லை நகரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இது பிரசித்தி பெற்ற கோவில். இந்த கோவிலில் நேற்று இரவு பூஜை முடிந்து 9 மணிக்கு நடையை மூடிவிட்டு கோவில் பூசாரி சக்தி மாரியப்பன் சென்றிருக்கிறார். இந்நிலையில் இன்று காலை கோவில் கதவு திறந்து இருப்பதாக அவ்வழியே சென்றவர்கள் சக்தி மாரியப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கேட்டு உடனடியாக கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவிலின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் மாரியப்பன்.

உடனே உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த முருகன் சிலை,வள்ளி சிலை, தெய்வானை சிலை, முத்து மாரியம்மன் சிலை என 4 ஐம்பொன் சிலைகளும், 5 சவரன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து மாரியப்பன் பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதற்கிடையில் இக்கோயிலின் ஆருகே உள்ள ஸ்ரீ ராகவேந்திரா ஆலயத்திலும் மூன்று ஐம்பொன் சுவாமி சிலைகள் திருடு போயுள்ளது.

இதையடுத்து பட்டாபிராம் போலீசார் இரவு ரோந்து பணியில் அந்தப் பகுதி முழுவதும் சல்லடை போட்டு தேடினர். அப்போது பட்டாபிராம் ரயில் நிலையத்தில் தப்பித்து செல்லக் காத்திருந்த அடையாளம் தெரியாத, 3 நபர்கள் போலீசாரைக் கண்டதும் சாக்குப்பைகளை கீழே போட்டுவிட்டு ஓடி உள்ளனர்.

உடனடியாக சாக்கு பையை சோதனை செய்தபோது மேற்கண்ட திருடுபோன 7 ஐம்பொன் சிலைகள் அதற்குள் இருந்தது தெரியவந்தது.

இதனை பட்டாபிராம் போலீசார் கைப்பற்றி காவல்நிலையம் கொண்டு வந்துள்ளனர். அதன்பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா உதவியுடன் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கோவிலில் திருடிய தங்க நகைகளை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.