தமிழ்நாடு

வேலூர் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்த விவகாரம் - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

webteam

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 7 நபர்கள் உயிரிழந்தது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என மருத்துவமனையில் ஆய்வு நடத்திய மருத்துவகல்வி இயக்குநர் நாராயணபாபு  உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரும், பொது வார்டில் சிகிச்சை பெற்று 3 பேரும் ஒரே நாளில் உயிரிழந்தனர். இவர்களில் 2 பேர் பெண்கள். இந்த ஏழு பேரின் உயிரிழப்புக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் போனதே காரணம் என அவர்களின் உறவினர்கள் புகார் எழுப்பினர்.

இது குறித்து அவர் கூறும் போது, “ ஆக்ஸிஜன் வினியோகம் தடைபட்டதால் 7 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மருத்துவர்கள் ஆம்புலன்ஸ்களில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்து சென்று சிகிச்சைக்கு கொடுத்தனர்” என்றனர்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா வார்டில் இருந்த சில நோயாளிகள் வேலூர் பழைய அரசு மருத்துவமனைக்கும் வாலாஜா மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது. வாகனங்களில் கொண்டுவரப்பட்ட சுமார் 42 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வார்டுகளில் பொருத்தப்பட்டதாகவும், வளாகத்தில் உள்ள ஆக்ஸிஜன் டேங்கில் ஏற்பட்ட பழுதும் சீரமைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக மருத்துவக் கல்வி துறை இயக்குனர் நாராயண பாபு, அங்கு நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். மேலும், வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரமும் மருத்துவமனையில் விசாரணை நடத்தினார். மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வி, மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் மணிவண்ணண் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பின், அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 7 பேரும் வெவ்வேறு உடல்நலக்கு குறைவுகளால் வெவ்வேறு நேரங்களில் உயிரிழந்ததாகக் கூறினார்.

வேலூர் ஆட்சியர் சண்முகம் கூறும் போது, “ உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினர் எழுப்பிய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்தார். உயிரிழப்புகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்” என்றார்.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில், கடந்த ஆண்டு கொரோனா சிகிச்சையில் இருந்த மருத்துவமனை தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட 2 பேர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டம் நடத்தியது நினைவுகூரத்தக்கது.