தமிழ்நாடு

நிர்மலாதேவி விவகாரம் - தீவிரமாகும் விசாரணை

நிர்மலாதேவி விவகாரம் - தீவிரமாகும் விசாரணை

webteam

உதவி பேராசிரியை நிர்மலா தேவி மீதான வழக்கு தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதப் பிரிவு பேராசிரியராக பணி புரிந்தவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளிடம் பேசிய தொலைப்பேசி உரையாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதில் மதுரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் பாலியல் ஆசைக்கு இணங்க மாணவிகளிடம் அவர் வலியுறுத்துவதாகவும், இதன் மூலம் பணம் கிடைக்கும் என்பன உள்ளிட்ட ஆசைகளை தூண்டியதாகவும் நிர்மலாதேவி மீது குற்றம் சாட்டப்பட்டது. 

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த, மாணவிகளை தவறாக வழிநடத்தியதாகக் கூறப்படும் பேராசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கல்லூரி முதல்வர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நிர்மலா தேவி மீது அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். 

கைதான நிர்மலா தேவி, 12 நாட்கள் நீதிமன்ற காவலில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து விருதுநகர் சிபிசிஐடி எஸ்பி ராஜேஸ்வரி தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதற் கட்டமாக இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை தனிப் படையினர் பார்வையிட்டுள்ளனர். இதனிடையே, ஆளுநர் அமைத்த விசாரணை குழு அதிகரி ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானமும் விசாரணையைத் தொடங்கினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் சின்னையா மற்றும் துணைவேந்தர் செல்லத்துரையிடம் அதிகாரி சந்தானம் விசாரணை நடத்தியுள்ளார். மதுரை மற்றும் அருப்புக்கோட்டையில் தொடர்ந்து 3 நாட்களுக்கு விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.