திண்டுக்கல் மருத்துவமனையில் தீ விபத்து புதிய தலைமுறை
தமிழ்நாடு

திண்டுக்கல்: மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து... நடந்தது என்ன? முழு விவரம்!

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 வயது சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

PT WEB

செய்தியாளர்: காளிராஜன்

திண்டுக்கல் - திருச்சி சாலையில் காந்திஜி நகரில் டாக்டர் முரளிதரன் என்பவருக்கு சொந்தமான எலும்பு முறிவு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நான்கு தளங்கள் உள்ளன. தீவிர சிகிச்சை பிரிவு உட்பட நூறு படுக்கைக்கு மேல் கொண்ட மருத்துமனையாக இது செயல்பட்டு வந்தது.

திண்டுக்கல் தீ விபத்து

இந்நிலையில் நேற்று இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது திடீரென இரவு நேரத்தில், தரைத்தளத்தில் உள்ள வரவேற்பு அறையில் மின் கசிவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே மளமளவென தரைத்தளம் முழுவதும் பரவியது. தீ விபத்தால் ஏற்பட்ட புகை மூட்டம் நான்கு தளங்களுக்கும் வேகமாக பரவியது. பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர்கள் தீயை அணைக்க முற்பட்டும் தீயை அணைக்க முடியவில்லை என சொல்லப்படுகிறது.

இதற்குள் தீ பரவியதில், புகை மூட்டம் காரணமாக உள் மற்றும் புற நோயாளிகள், அவர்களின் உறவினர்கள், பயிற்சி செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் என அனைவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் விரைந்து திண்டுக்கல் நகரில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு சென்றன. அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, உள் நோயாளிகளை விரைந்து மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி அனைவரையும் வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

திண்டுக்கல் தீ விபத்து

தொடர்ந்து, மீட்புப்பணியில் ஈடுபட்ட வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர்கள் அவர்களது உறவினர்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோரை மீட்டனர். ஆம்புலன்ஸ் மூலம் அருகிலிருந்த அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். 

இந்த தீ விபத்தின் போது லிஃப்டில் இருந்த மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள், ஒரு பெண் குழந்தை என ஏழு பேர் மாட்டிக் கொண்ட நிலையில், அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். தீயணைப்புத்துறையினர் லிஃப்ட்டை உடைத்து அனைவரது உடலையும் மீட்டனர்.

இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 23 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 3 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி நேற்று இரவே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீக்காயத்தால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதேபோல் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியும் சம்பவ இடத்தை பார்வையிட்டு நோயாளிகளுக்கு ஆறுதல் கூறினார்.