தமிழ்நாடு

சட்டப்பேரவை தொடர்பான 7 வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

webteam

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கப்பட்ட வழக்கு உள்ளிட்ட சட்டப்பேரவை தொடர்பான 7 வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கப்பட்ட வழக்கில் தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் வாதங்கள் முன்வைக்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து பேரவை செயலாளர், சபாநாயகர் அல்லது முதல்வர் தரப்பு வாதங்கள் தொடங்கும் எனத் தெரிகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கும் இன்று விசாரிக்கப்பட உள்ளது.

இதேபோல், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் ஆகியோர் பதவியில் நீடிக்க தடை விதிக்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏ கு.பிச்சாண்டி தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு வருகிறது. மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு சொகுசு விடுதியில் தங்கிய எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது சரிதான் என சமூக ஆர்வலர் செம்பியம் தேவராஜன் தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு வருகிறது.திமுக எம்.எல்.ஏக்கள் 21 பேருக்கு பேரவை உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் இன்று  விசாரிக்கப்படவுள்ளது.